மின்னணு பயிர்சாகுபடி கணக்கீட்டு பணி ஆய்வு
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ஒன்றியத்தில் நடந்து வரும் மின்னணு பயிர்சாகுபடி கணக்கீட்டு பணியை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சின்னசேலம் ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மரவள்ளி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு உட்பட பல்வேறு வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகளின் நில உடமைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் மின்னணு பயிர்சாகுபடி கணக்கீட்டு பணி நடக்கிறது. இதில் சர்வே எண் வாரியாக விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர் பரப்பு விபரங்களை இணைய வழியாகவே தெரிந்து கொள்ளலாம். இப்பணிக்காக அனைத்து கிராமங்களுக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென்செட்டியந்தலில் நடந்த மின்னணு பயிர் சாகுபடி கணக்கீட்டு பணியை, தோட்டக்கலை மற்றும் மலைப்பிரிவுகள் துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சிவக்குமார், சின்னசேலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சக்திவேல், தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயமணி, பாக்கியராஜ், ஏழுமலை, கோவிந்தராஜ், சவுந்நதர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.