கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 439 பேர் ஆஜர் விசாரணை செப்., 19 க்கு ஒத்தி வைப்பு
கள்ளக்குறிச்சசி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 439 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கு விசாரணை செப்., 19ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. இவ்வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார்வையிலான போலீசார் விசாரித்தனர்.இதில் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி சூறையாடியது, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, சின்னசேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்தனர். கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி உட்பட 615 பேர் மீது வழக்கு பதிந்து, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் 3 பேர் உயிரிழந்து விட்டனர். இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. 439 பேர் ஆஜராகினர்.வெளிநாட்டில் உள்ள 7 பேர் உட்பட 173 பேர் ஆஜராகவில்லை. வழக்கினை விசாரித்த நீதிபதி ரீனா விசாரணையை வரும் செப்., 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.