உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியை வெட்டிய கணவர் கைது: கள்ளக்குறிச்சி கோர்ட் வாசலில் பரபரப்பு

மனைவியை வெட்டிய கணவர் கைது: கள்ளக்குறிச்சி கோர்ட் வாசலில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கோர்ட் வாசலில் மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் அய்யனார், 32; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி கமலி, 27. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. மனைவியிடம், அய்யனார் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். ஆத்திரமடைந்த கமலி, நேற்று கள்ளக்குறிச்சி மகளிர் போலீசில் அய்யனார் மீது புகார் செய்துவிட்டு, கருணாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவரை, பின்தொடர்ந்து சென்ற அய்யனார், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு, கமலியை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். கமலி தடுத்தபோது, அவரது கை மற்றும் தோள் பட்டையில் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட கமலி கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் அலறியடித்து ஓடினார். அய்யனார் துரத்தி சென்ற நிலையில், அங்கிருந்த கோர்ட் போலீசார் அரிவாளுடன் அய்யனாரை மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த கமலியை, போலீசார் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அய்யனாரை கைது செய்தனர். அய்யனார் மீது ஏற்கனவே கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. கோர்ட் முன்பு நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி