அரசு மாதிரி பள்ளியின் கற்றல் அனுபவம்; முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்களின் கற்றல் அனுபவம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் கல்வி, தொழில் வழிகாட்டுதல், உயர்கல்வி தேர்வு, விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு போன்று கடந்து வந்த பாதை தொடர்பாக முன்னாள் மாணவர்களின் அனுபவங்களை பகிரும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் அரசு மாதிரிப் பள்ளி முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் அரசு மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்று, பள்ளியில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆளுமை பயிற்சி, உயர்கல்வி தொடர்பான பயிற்சி, நுழைவு தேர்வு பயிற்சி, மேற்படிப்பு தொடர்பான அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தற்போதைய பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். மாதிரி பள்ளி மாணவர்களின் கற்றல் அனுபவங்களை பகிர்வது போன்று, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் கல்வி துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.