காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார், சந்தைதபேட்டை, தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மாயவன் மகன் சந்தோஷ்குமார், 38; திருமணம் ஆனவர். மனைவி பிரேமா, 33; மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். சந்தோஷ்குமார் எலக்ட்ரானிக் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பிரேமா திருக்கோவிலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் மாலை, சந்தோஷ்குமார் அணிந்திருந்த உடைகள் அருகில் உள்ள கிணற்றின் அருகே கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உறவினர்கள் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் தேடியதில் சந்தோஷ் குமார் உடல் மீட்கப்பட்டது. சந்தோஷ்குமார் இறப்பு குறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.