சாலைகளில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை - சங்கராபுரம் - கச்சிராயபாளையம் பகுதிகளுக்கு செல்லும் 4 முக்கிய சாலைகள் உள்ளன. தினமும் இந்த சாலைகள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கள்ளக்குறிச்சியின் நான்கு புறமும் உள்ள முக்கிய சாலைகளில் பல இடங்களில் அதிகளவில் மணல் குவிந்துள்ளது. இதனால் இவ்வழியே பஸ், லாரிகள் செல்லும்போது புழுதி பறப்பதால் பைக்கில் செல்வோர், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும், பைக்கில் செல்பவர்கள் மணலில் சறுக்கி கீழே விழுந்து படுகாயமடைவதுடன், வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, கள்ளக் குறிச்சி சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.