பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கள்ளக்குறிச்சியில் பயணிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள், மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். இதனால், எப்போதும் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும். பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் வெளிப்புறத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவுபடுத்தியுள்ளனர். பஸ் நிலையத்திற்குள் நிற்பதிற்கு இடம் இன்றி, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பயணிகள் கடைகள் அருகில் நின்றால் ஒதுங்கி நில்லுங்கள், துாரம் செல்லுங்கள் என பயணிகளை வியாபாரிகள் விரட்டுகின்றனர். அதேபோல் பஸ் நிலையத்திற்குள் உள்ளே மற்றும் வெளியேறும் பாதையில் பூ, பழம் விற்பனை செய்யவோர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நடைபாதைகளில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.