மாணவர்களுக்கு ராஜ விருந்தாக பட்டம் இதழ்: ஆச்சார்யா கல்வி குழும அரவிந்தன் பேச்சு
கள்ளக்குறிச்சி: தகவல்களை ஒன்று திரட்டி மாணவர்கள் கைகளில் ராஜ விருந்தாக பட்டம் இதழ் வழங்கி வருகிறது என, ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் பேசினார். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த வினாடி - வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியதாவது: பட்டம் உயர்ந்து பறக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நுால் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில், காற்றின் திசை வழியில் பட்டம் சென்றுவிடும். மாணவர்கள், கல்வியை மற்றவரோடு ஒப்பிடுவதற்கும், போட்டியிடுவதற்கும் மட்டுமே படிக்காமல் உயரிய சிந்தனையோடு படிக்க வேண்டும். தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாதீர்கள். கலவையான அறிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கிய தேவையாக உள்ளது. ' தினமலர்- பட்டம்' இதழ், மாணவர்களுக்கு தேவையான பல்துறை அறிவை பெருக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஏ.ஐ., தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை மட்டும் படித்தால் போதாது. நீங்கள் படிக்கும் கல்வி உங்களை மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பட்டம் இதழ் படித்தால் நீங்கள் மற்றவர்களோடு கூட்டுறவாக செயல்படலாம். மேலும் உங்களுக்கு உயரிய சிந்தனை உருவாக்கும். மாணவர்களாகிய நீங்கள் பலருக்கு உத்தரவிடும் அறிவை பெற வேண்டும். உலகில் உள்ள பல்வேறு நுால்களில் உள்ள தகவல்களை ஒன்று திரட்டி மாணவர்களாகிய உங்கள் கைகளில் ராஜ விருந்தாக பட்டம் இதழ் வழங்கி வருகிறது. இவ்வாறு அரவிந்தன் பேசினார்.