ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளித்து மகிழும் மக்கள்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் பலரும் குளித்தும், செல்பி எடுத்து வருகின்றனர். திருக்கோவிலுார் அணைக்கட்டு செழித்து வளர்ந்த மரங்களுக்கு இடையே சிறுவர்களும், பெரியவர்களும் விளையாடி மகிழும் பொழுது போக்கு பகுதியாக இருந்தது. புதர்கள் மண்டி, ஆபத்தான இடமாக மாறியதுடன், பெஞ்சல் புயல் வெள்ளத்தில் அணைக்கட்டு பெருமளவில் சேதமடைந்தது. அணைக்கட்டு ரூ. 130 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்லும் வெள்ளத்தை காண்பதற்கும், மலட்டாறு, ராகவன் வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அழகை கண்டு ரசிப்பதற்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அணைக்கட்டு பகுதியில் குவிந்து வருகின்றனர். பலர் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளிப்பதும், ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிக்கும் நிலையில், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி ஆற்றில் இறங்கி குளிக்கும் இது போன்ற செயலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.