ரூ. 21 லட்சம் மோசடி: கணவன், மனைவி கைது
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வங்கி மூலம் ரூ. 21 லட்சம் கடனை பெற்று மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 43; இவரது மனைவி சுகந்தி, 40; இருவரும், அதே பகுதியை சேர்ந்த 25 பேர் பெயரில் வங்கியில் ரூ. 21 லட்சம் கடன் பெற்றுள்ளனர். அந்த கடனை தானே மாதம்தோறும் செலுத்துவதாக கூறியவர், கடனை செலுத்தவில்லை.இதனால் வங்கி அதிகாரிகள், 25 பேர்களிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும்படி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கடன் வாங்கிய அண்ணாமலை, அவரது மனைவி சுகந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் வங்கியில் பணம் கட்டுவதாக கூறிவிட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருந்தை கிராமத்தை சேர்ந்த எப்சிபாஜனலின்ரியா என்ற பெண் கொடுத்த புகாரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து அண்ணாமலை, சுகந்தி இருவரையும் கைது செய்தனர்.