உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் படிக்கட்டில் சாகசம் செய்யும் பள்ளி மாணவர்களால் விபத்து அபாயம்

அரசு பஸ் படிக்கட்டில் சாகசம் செய்யும் பள்ளி மாணவர்களால் விபத்து அபாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்களின் படிக்கட்டில் தொங்கியவாறு சாகசம் செய்யும் பள்ளி மாணவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பள்ளி மாணவர்கள், அரசு பஸ்களில் பள்ளிக்கு செல்கின்றனர். கிராமப்புறங்களுக்கு போதிய அளவில் அரசு டவுன் பஸ்கள் கிடையாது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுடன், தினசரி வேலைக்கு செல்லும் பொதுமக்களும் பயணிப்பதால் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.பஸ்சில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். சில மாணவர்கள் பஸ்சினை அடித்து சேதப்படுத்துதல், சத்தம் எழுப்புதல், ஜன்னல் மற்றும் பஸ் மேற்கூரை மீது ஏறுதல் போன்ற சாகச சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர் கதையாக உள்ளது. பஸ் டிரைவர், கண்டெக்டர்கள் இது குறித்து கேட்கும் போது, மாணவர்கள் ஒருமையில் ஆபாசமாக பேசுகின்றனர்.கள்ளக்குறிச்சியில் இருந்து பெருவங்கூர், தண்டலை வழியாக மையனுார் நோக்கி சென்ற தடம் எண் 43 ஏ என்ற அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஜன்னல் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.இது போன்ற நிகழ்வுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்சில் ஆபத்தான முறையில் பயணிக்க கூடாது என மாணவர்களுக்கு ஆசிரியர்களும் அறிவுரை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ