உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மகப்பேறு மருத்துவமனையின் பாதுகாப்பு... கேள்விக்குறி : சி.சி.டி.வி., கேமரா, புறக்காவல் நிலையம் தேவை

அரசு மகப்பேறு மருத்துவமனையின் பாதுகாப்பு... கேள்விக்குறி : சி.சி.டி.வி., கேமரா, புறக்காவல் நிலையம் தேவை

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் அறை, பிறப்பு, இறப்பு பதிவு, குழந்தைகள் மஞ்சள் காமாலை சிகிச்சை அளிக்கும் இடம் உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதன் அருகிலேயே நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பரிசோதனைக்காகவும், பிரசவத்திற்காகவும் இங்கு வருகின்றனர். தமிழகத்தில் அதிக பிரசவங்கள் நடக்கும் முதல் 10 இடங்களில் கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனை இடம்பெற்றுள்ளது. பிரசவத்திற்காக வரும் நிறைமாத கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களின் பாதுகாப்புக்காக வரும் உறவினர்கள் சாப்பாடு, துணி, பணம், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களுடன் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக தங்குகின்றனர். மருத்துவமனை வளாகம் மற்றும் வெளி பகுதியில் இரவில் கர்ப்பிணிகளின் உறவினர்கள் துாங்கும் போது, அவர்கள் வைத்துள்ள மொபைல்போன், பணம் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பைக்களை மர்மநபர்கள் திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வருடம் சற்று மன வளர்ச்சி குறைந்த பிரசவித்த பெண், தனது குழந்தையை துாக்கி சென்று அருகில் உள்ள கடையில் வீசி சென்ற சம்பவம் நடந்தது. கடந்த ஆக., 9ம் தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை பெண் ஒருவர் திருடி சென்றார். அப்போது, குழந்தையின் பாட்டி திடீரென எழுந்து சத்தமிட்டதால் குழந்தையை கடத்திய பெண் சிக்கினார். மகப்பேறு மருத்துவமனையில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதுள்ள பாதுகாப்பு நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து வருகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்கவும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் சி.சி.டி.வி., கேமிராக்கள் பொருத்தி, முறையாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். மேலும், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைத்து சுழற்சி முறையில் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை