கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கான இடத்தை தேர்வு செய்து கருத்துரு வழங்கல்
கள்ளக்குறிச்சி : தினமலர் செய்தி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக அலுவலகம் மற்றும் நுாலகம் ஏற்படுத்துவதற்கான இடம் தேர்வு செய்து, அதற்கான கட்டுமான பணிகளின் மதிப்பீடு மற்றும் கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நுாலகம் கட்டுவதற்காக துறை சார்ந்து ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான இடம் தேர்வு செய்யாததால், கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் துவங்கவில்லை.இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட நுாலக அலுவலர் காசிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது முழுநேர கிளை நுாலகமாக செயல்பட்டு வரும் நுாலகத்தை, மாவட்ட மைய நுாலகமாக தரம் உயர்த்திடவும், அதற்கு புதிதாக சொந்த கட்டடம் கட்ட கள்ளக்குறிச்சி நகரில் புல எண்.128/5-ல் 0.15.50 ஏர்ஸ் காலி மனையினை நுாலக துறைக்கு நிலமாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த காலிமனையில் மாவட்ட மைய நுாலகம் கட்ட பொதுப்பணித்துறையினரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீடு மற்றும் கருத்துருவினை பொது நுாலக இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் மாவட்ட நுாலக அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நுாலகம் கட்டுவதற்கான அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட உடன் நுாலகம் கட்டப்படும்' என, தெரிவித்துள்ளார்.