கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவ., 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வரும் நவ., 4ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலுடன் 2002ல் வெளியான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சரிபார்ப்பு மற்றும் பொருத்துதல், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 11,58,433 வாக்களர்கள் உள்ளனர். 2002ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலின்படி 7,01,513 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். 2002ஆம் ஆண்டு மற்றும் 2025ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் சரிபார்ப்பு மற்றும் ஒத்திசைவு செய்து வாக்காளர்கள் விவரம் சரிபார்க்கப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,275 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியை வரும் நவ. 4 முதல் டிச. 4 வரையிலும் மேற்கொள்வர். டிச. 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக டிச. 9 முதல் 2026 ஜன. 8 வரை கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு மனுக்கள் பெறப்படும். அதனைத் தொடர்ந்து வரும் 2026 பிப். 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டதும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை ஒப்புகை சீட்டுடன் வழங்குவர். வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிகள் சம்மந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பர். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு என கலெக்டர் அலுவலகத்திலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பிரத்யேக கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950, உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதி கட்டுப்பாட்டு அறை 04149-222255, ரிஷிவந்தியம் தொகுதி 04151-235400, சங்காரபுரம் தொகுதி 04151-235329, கள்ளக்குறிச்சி தொகுதி 04151-222449 எண்ணில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு மேற்படி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். எனவே, வாக்காளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் மேற்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.