சங்கராபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை தேவை
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சங்கராபுரம் வழியாக திருப்பதி, சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.சங்கராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. மேலும் சங்கராபுரம் நகரில் முக்கிய சாலைகளின் இரு புறத்தையும் பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசும் இல்லை. இதனால், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே சங்கராபுரம் நகரில் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சீராக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.