உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்கள் தொழிலதிபர்களாக வளர்ந்து வேலை அளிப்பவராக முன்னேற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அட்வைஸ்

மாணவர்கள் தொழிலதிபர்களாக வளர்ந்து வேலை அளிப்பவராக முன்னேற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அட்வைஸ்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மகளிர் திட்டம் சார்பில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசியதாவது; குடும்பத்தின் அவசர தேவைக்கு அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலையை மாற்றுவதற்காக, அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடனை முறையாக திருப்பி செலுத்தினால், மீண்டும் கூடுதலாக கடன் உதவி வழங்கப்படும். மேலும், வங்கிகள் மூலமும் கடனுதவி பெறலாம். மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்காக கல்லுாரி சந்தை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுபோன்ற அரசு திட்டங்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், இன்றைய தலைமுறையினர் எந்த மாதிரியான பொருட்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து உற்பத்தியினை பெருக்க இந்நிகழ்ச்சி உதவியாக இருக்கும். சுய உதவி குழுவினரின் கைவினை பொருள், உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். மாணவர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவதை மட்டும் குறிக்கோளாக வைத்து கொள்ள கூடாது. தொழில் தொடங்கி தொழிலதிபர்களாக வளர்ந்து, பிறருக்கு வேலை தருபவர்களாக முன்னேற வேண்டும். சிறு, குறு வியாபாரிகளுக்காக அரசு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ