கம்பு பயிர் சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருட்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கம்பு பயிர் சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்களை 50 சதவீத மானியத்தில் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மாவட்டத்தில் அதிக பரப்பளவில் கம்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. சத்துக்கள் அதிகம் உள்ள சிறுதானிய பயிரான கம்பு அனைத்து வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. குறைந்த அளவு தண்ணீரிலும், மானாவரி நிலத்திலும் செழித்து வளரும். சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள கம்பு பயிரினை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், கம்பு பயிர் விதைகள், விதை நேர்த்திக்கு தேவையான டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ், கம்பின் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்கும் சிறுதானிய நுண்ணுாட்ட கலவை, உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.