உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடம் பைக் ஸ்டாண்டாக மாறி வரும் அவலம்

பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடம் பைக் ஸ்டாண்டாக மாறி வரும் அவலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில், பஸ்கள் நிறுத்துமிடம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறுகிய இடமாக இருந்ததால் பஸ் நிலையத்திற்கு உள்ளே, வெளியே செல்லும் வழிகள் வரை பஸ்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட வடக்கு பகுதியில் பஸ்கள் நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதில் சென்னை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பஸ்கள் நிறுத்துமிடம் இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. மாறாக அதற்கு முன்பாக சற்று தள்ளி நடுவிலேயே நீண்ட நேரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். சேலம் மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துமிடம் நுழைவு வாயிலை ஒட்டியவாறு இருப்பதால், சில நேரங்களில் உள்ளே செல்ல முடியாத வகையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ்கள் நிறுத்துவதற்காக அமைத்துள்ள கட்டையில் பஸ்கள் நிறுத்தாதது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது பஸ்கள் நிறுத்தக்கூடிய இடங்கள் பைக்குகள், கார்கள், சரக்கு வேன்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்கள் பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும், இட நெருக்கடியால் அவ்வப்போது பயணிகள் மீது பஸ் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. விபத்தில் ஒரு சிலர் இறந்து போன சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய இடங்களில் பஸ்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ