சங்கராபுரம் பஸ் நிலையத்தில் டிராபிக் ஜாம் : மக்கள் அவதி
சங்கராபுரம் : சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சங்கராபுரத்தில் தாலுகா அலுவலகம், வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், கடைகள் உள்ளன. இதனால் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தினசரி தேவைக்காக, சங்கராபுரம் நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர். சங்கராபுரத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பலர் தங்களது பைக்குகளை, பஸ் நிலையத்தில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் ஆட்டோக்கள், பஸ் நிலைய கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்களும் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பஸ்கள் எளிதாக வந்து செல்ல முடியவதில்லை. பயணிகளும் தாங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய பஸ்சை கண்டுபிடித்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சங்கராபுரம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பைக்குளை ஒழுங்குப்படுத்தவும், ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி செல்ல தடை விதிக்க வேண்டும்.