உளுந்துார்பேட்டை அரசு கல்லுாரி கட்டடம் கட்டி முடிப்பது எப்போது? கம்யூட்டர் லேப், பேராசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிய கட்டடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாடம் நடத்த போதிய அளவில் பேராசிரியர்கள் இன்றியும், இட நெருக்கடியில் மாணவர்கள் தவித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி சென்னை சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் தற்காலிக இடத்தில் துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., கம்யூட்டர் சையின்ஸ் ஆகிய 5 பிரிவுகள் துவங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு 290 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. தற்போது, 2026 - 27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வுக்கு பிறகு மொத்தம் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அடுத்தடுத்த கலந்தாய்வுக்கு பிறகு மேலும், மாணவர் எண்ணிக்கை கூடும். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதிற்கு கல்லுாரி முதல்வர் உள்ளிட்ட 5 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 3 பேர் நிரந்தர பேராசிரியர்கள். ஒருவர் தற்காலிக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். கல்லுாரி துவங்கியபோது முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டும் இருந்ததால், 4 பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தி சமாளித்தனர். ஆனால், தற்போது 2வது ஆண்டு துவங்கி விட்டது. 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றால் கூடுதல் பேராசிரியர்கள் தேவை. இதுவரை கூடுதல் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், இந்தாண்டு முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கல்லுாரிக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் இட நெருக்கடியில் அமர்ந்து பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லுாரிக்கு தேவையான டேபிள், பெஞ்ச், மின் விசிறி உள்ளிட்ட உபாரணங்கள் கல்லுாரி மேலாண்மை குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வாங்கி தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லாததால், பள்ளியின் ஒரு வகுப்பறை கட்டடத்தை இடித்து கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் 5 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி ரூ. 18.5 கோடி மதிப்பில் கல்லுாரி கட்டடம் கட்டுவதிற்கு அப்போதைய அரசு பூமி பூஜை நடத்தியது. புதிய கல்லுாரி கட்டடம் 20 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. எனவே, கல்லுாரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்யூட்டர் லேப் இல்லை இக்கல்லுாரி பி.எஸ்.சி., கம்யூட்டர் சையின்ஸ் பாட பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வரை கல்லுாரியில் கம்யூட்டர் லேப் வசதி இல்லை. லேப் வசதி இல்லாததால் கம்யூட்டர் சையின்ஸ் பிரிவு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கல்லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகள், பேராசிரியர்கள், லேப் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.