உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள்... பாதிப்பு; மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள்... பாதிப்பு; மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாவட்டத்தில் கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காப்புக் காடுகள் அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது குறைந்த பரப்பில் மட்டுமே காப்புக்காடுகள் உள்ளன. அடர்த்தியான காடுகள் குறைந்ததால் பாதுகாப்பு இன்றி பல விலங்குகள் அழிந்து விட்டன. இருப்பினும் தற்போது காப்பு காடுகளில் மான், நரி, மயில், முயல், முள்ளம்பன்றி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் குறைந்த பரப்பில் உணவு, தண்ணீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலங்குகள் உயிரிழப்பு

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளிக்கு இரவு நேரங்களில் இந்த விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி செல்வது அதிகரித்து வருகிறது. அந்த சமயங்களில் சமூக விரோத கும்பலால் வேட்டையாடப்பட்டும், மின் வேலியில் சிக்கியும், வேட்டை நாய்களிடம் சிக்கியும், கிணற்றில் விழுந்தும் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோடை காலங்களில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வனப்பகுதிக்குள் முக்கிய இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

தண்ணீர் இல்லாத தொட்டிகள்

அந்த தொட்டிகளில் டிராக்டர் டேங்கர் மூலம் தண்ணீர் எடுத்து சென்று வனத்துறையினர் நிரப்ப வேண்டும். ஆனால் வனத்துறையினர் அவ்வாறு செய்வது கிடையாது. மேலும் அந்த தண்ணீர் தொட்டிகள் முறையான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.தற்போது காய்ந்து வரும் கடும் வெயிலினால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு புற்கள் காய்ந்து, தொட்டிகள் முற்றிலும் வறண்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி வயல்வெளி மற்றும் மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் செல்ல துவங்கி உள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த சில தினங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தண்ணீர் தேடி வயல்வெளிக்கு வந்த மான் ஒன்று சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தது. தண்ணீர் தேடி வரும் மான்கள் பாசன கிணற்றில் விழுவதும், சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு காயமடைவது மற்றும் உயிரிழப்பதும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ