முன் விரோத தகராறில் வாலிபர் சுட்டு கொலை
கச்சிராயபாளையம்;கல்வராயன்மலையில் முன்விரோத தகராறில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கொட்டபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன், 50; இவரது மகன்கள் விஜய், 28, பிரகாஷ், 26. விவசாய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கும், பக்கத்து வயலில் வசிக்கும் நடுமத்துார் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக, ஐந்து ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தின ம் மாலை, 5:00 மணிக்கு, பிரகாஷ் தன் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டதில், பின் தலையில் பலத்த காயம் அடைந்து பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் பிரகாஷை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிச்சன் புகாரில், கரியாலுார் போலீசார், தங்கராஜ், அவரது சகோதரர்கள் செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகிய நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.