உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * காஞ்சி முழுதும் சளி, இருமலுடன் பரவது.. மர்ம காய்ச்சல் . * மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

* காஞ்சி முழுதும் சளி, இருமலுடன் பரவது.. மர்ம காய்ச்சல் . * மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

காஞ்சிபுரம் :தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, காஞ்சி மாவட்டம் முழுதும் சளி, இருமல், உடல் வலியுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. வழக்கமாக தினமும் 3,000 புறநோயாளிகள் வந்த காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும், 4,500 பேர் குவிவதால் மருத்துவமனை நிர்வாகமும் திணறி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு வாரங்களாக மாலை, இரவு நேரத்தில் மழையும், பகலில் கடுமையான வெயில் என, தட்பவெப்ப நிலை மாறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறுவர்களும், பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சராசரியாக 100 பேர் புறநோயாளிகளாக சமீப நாட்களாக அதிகமானோர் வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சரியாக ஒரு நாளைக்கு 3,000 -- 3,500 பேர் புறநோயாளிகளிகாக சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நாட்களாக புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 4,500 பேர் வரை வந்து செல்கின்றனர். இதில், 50 சதவீதத்தினருக்கு மேல், சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் வழக்கமாக வரும் எனவும், மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால், சரியாகும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பலருக்கு காய்ச்சல், சளி என்ற பிரச்னை பரவலாக காணப்படுவதால், வைரஸ் பரவல் பற்றி ஒருவித அச்ச உணர்வு பலருக்கும் ஏற்பட்டள்ளது. தமிழகம் முழுதும் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில், குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என, உறுதி செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் த.ரா.செந்தில் கூறியதாவது: குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது துணியை பயன்படுத்த வேண்டும். பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். முந்தையநாள் சமைத்த உணவு மறுநாள் சாப்பிடக்கூடாது. கழிப்பறைக்கு சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மழைநீரில் நடந்து சென்றால், கால்களை சுத்தமாக சோப்பு கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதனால், மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கும். நோய் அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுமா காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் பரவி வருவதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர், மழைநீர் தேங்காமல் இருக்கவும், கொசு மருந்து புகை அடிக்கவும், குப்பையை முறையாக அகற்றவும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை