இடிந்து விழும் நிலையில் குண்டுபெரும்பேடு பள்ளி கட்டடம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடம் விரிசலடைந்து மிகவும் சேதமடைந்ததால், கடந்த ஆண்டு புதிதாக 2 வகுப்பறை கட்டப்பட்டது.தற்போது, புதிய வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், சேதமடைந்த பழைய கட்டடம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடத்தின் அருகே மாணவ - மாணவியர் விளையாடி வருகின்றனர்.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள அக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, 'பழைய கட்டடத்தை இடித்து அகற்ற ஆணை பெறப்பட்டு விட்டதாகவும், சில தினங்களில் கட்டடம் இடித்து அகற்றப்படும்' என தெரிவித்தார்.