| ADDED : ஏப் 15, 2024 04:22 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பேரணக்காவூரில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டுகளில், 5 கி.மீ., துாரத்தில் உள்ள அரும்புலியூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனர்.இதனிடையே, கடந்த ஆண்டு பேரணக்காவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில், உத்திரமேரூர் வட்டாரத்தின் பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டும், பேரணக்காவூரில் திறக்கப்படவில்லை.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:பேரணக்காவூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு, 300க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை பணிகளை துவக்கி உள்ளோம்.பேரணக்காவூரில் கடந்த ஆண்டு, நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால், சிரமமின்றி நெல் கொள்முதல் செய்தோம். ஆனால், இந்த ஆண்டுக்கு அனுமதி கிடைக்காததால், அறுவடை செய்த நெல்லை வீடுகள் மற்றும் நெற்களங்களில் குவித்து வைத்துள்ளோம்.எனவே, இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.