திருவள்ளூர் : திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், திருமழிசை பேருந்து நிலையம் மற்றும் இந்தியன் வங்கி அருகே, தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதில், பேருந்து நிலையம் அருகே தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆவடி நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ஆகியோர் திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. அதேபோல், இந்தியன் வங்கி அருகே அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலிலும் தண்ணீர் இல்லாததால், பகுதிவாசிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார்
ஸ்ரீபெரும்புதுாரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜிவ் காந்தி நினைவு இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், காங்., சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பானையும் இல்லை... தண்ணீரும் இல்லை. அதேபோல், ராஜிவ்காந்தி நினைவு இல்லம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் நான்கு மண்பானைகள் உள்ளன.அந்த மண்பானைகளில் ஒன்றில் கூட தண்ணீர் இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு, தலைவர்கள் படத்துடன் விளம்பர பதாகைகள் வைப்பதில் காட்டும் அக்கறையை, தண்ணீர் பந்தலில் முறையாக தண்ணீர் வைப்பதில் காட்டுவதில்லை.