பழையசீவரத்தில் அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமையுமா?
வாலாஜாபாத்:சென்னை -- - கன்னியாகுமாரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இப்பணியின் போது, சாலை விரிவாக்கத்திற்காக பயணியர் நிழற்குடை கட்டடங்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.வாலாஜாபாத் அடுத்த பழையசீவரத்தில் ஏற்கனவே 3 இடங்களில், பயணியர் நிழற்குடை கட்டடம் பயன்பாட்டில் இருந்து, அவை அகற்றப்பட்டது.இந்நிலையில், தற்போது சாலை பணி முடிவுற்ற பகுதிகளின் பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்துதல் பணி துவங்கப்பட்டுள்ளது.ஆனால், பழையசீவரத்தில் மலை பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நிழற்குடை கட்டப்படுகிறது.பழையசீவரம் பிரதான சாலையில், ரயில்வே நிலையம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தாதது அப்பகுதி வாசிகள் மற்றும் பயணியர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:பழையசீவரம் பெரிய காலனியில் வசிக்கும் 350 குடும்பத்தினர், மற்றும் ரயில் மூலம் பயணிக்கும் ஏராளமானோர், ரயில்வே பேருந்து நிறுத்தம் வந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த நிழற்குடை கட்டடம் அகற்றப்பட்டது. தற்போது, இப்பகுதியில் நிழற்குடை கட்டாமல் விடுபட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இப்பகுதியில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த சம்பந்தப்டடதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.