மண் அள்ளுவதை நிறுத்த 11 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம்:உள்ளாவூரில் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என, 11 கிராம மக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து, தொள்ளாழி உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியதாவது: உள்ளாவூர் ஏரியில், மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை தாண்டி மண் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில், லாரிகள் அணிவகுத்து செல்வதால், பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதுதவிர, உள்ளாவூர் கிராமத்தை சுற்றியுள்ள தொள்ளாழி, கொசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோண்டாங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நீராதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது. ஆகையால், மாவட்ட நிர்வாகம், உள்ளாவூரில் மண் அள்ள அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.