பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் குளம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார் குளத்தில் குவியலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம், பிள்ளையார்பாளையம் அருகில் தாயார் குளம் உள்ளது. இக்குகுளக்கரையில், நீத்தார் வழிபாடு, அமாவாசை, மஹாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக உள்ளது. குளக்கரையில் அமர்ந்து முன்னோருக்கு திதி கொடுப்பவர்கள், மீதமாகும் தயிர், பால், எள், தேன், தீப எண்ணெய் பாக்கெட், வாட்டர் பாட்டில், கேரிபேக் உள்ளிட்டவற்றை குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக உள்ளது. இதனால், குளத்து நீர் மாசடைவதோடு, அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் தாயார் குளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை குளத்தில் வீச தடை விதிக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.