கைத்தறிக்கான கூலியை ரொக்கமாக வழங்க அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி இதுவரையில், சங்க அலுவகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குனர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியுள்ளார். நெசவு கூலியை நெசவாளர்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதால், நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர். இதுசம்பந்தமாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அடுத்தகட்டமாக, அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக, மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், அமைப்பு செயலர் கணேசன், அ.தி.மு.க., நிர்வாகிகள் விஸ்வநாதன், சம்பத், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின், துணை இயக்குனர் மணிமுத்துவிடம், நெசவாளர் கூலியை ரொக்கமாக வழங்க அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தினர்.