கலைத்துறையில் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம்:கலை பண்பாட்டுத் துறையில், வயதுக்கு ஏற்ப கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் கீழ், மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட் டத்திலும் கலைத் துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்குட் பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19 - 35 வயது வரைகலை வளர்மணி விருது,36 - 50 வயது வரைகலை சுடர்மணி விருது, 51 - 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாக கொண்டுள்ள கலைஞர்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுய விபர குறிப்பு, போட்டோ, வயது சான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன், காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில் உள்ள கலை பண்பாட்டு துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆகஸ்ட் 5க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.