32 டன் ஆவணம் இல்லாத நெல் விதைகள் விற்க தடை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் சோதனை செய்த, விதை ஆய்வு அதிகாரிகள், அரசால் அறிவிக்கப்படாத முறையான ஆவணங்கள் இல்லாத 32 டன் நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனர். சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகளை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளடக்கிய சென்னை மண்டல விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா தலைமையில், துணை இயக்குநர் வானதி, ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை செய்யும் கடைகளில் நேற்று சோதனை செய்தனர். ஆய்வின்போது, அரசால் அறிவிக்கப்படாத மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 32 டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும். மேலும், சேமிப்பு முறை, சுகாதாரமாக இல்லாத விதை நெல் விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா கூறியதாவது: விதை விற்பனையாளர்கள் அதிக முளைப்பு திறன் கொண்ட சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்க வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விபரங்கள் விலைப் பட்டியலுடன் தகவல் பலகையில் இடம் பெற வேண்டும். அரசால் அங்கீகாரம் பெற்ற அறிவிக்கப்பட்ட பருவத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதை நெல் உரம் மற்றும் பூச்சி மருந்து கண்டிப்பாக சேமித்து வைக்கக்கூடாது. புதிய ரகங்கள் என்றால், அதற்குரிய பதிவு சான்றிதழ், பகுப்பாய்வு முடிவு அறிக்கை மற்றும் இருப்பு பதிவேடும் முறையாக பராமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை ரசீது, விவசாயி தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு ஆவணங்களை முறையாக பராமரிக்க தவறினால், விதை சட்டத்தின்படி விதை விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.