அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும்.அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், நேற்று, காலை 5:00- மணிக்கு கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேத விற்பன்னர்கள் வாயிலாக கருடாழ்வார் படம் இடம் பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்து. ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது.இரண்டாம் நாள் உத்சவமான இன்று, காலை ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் சுவாமி வீதியுலா வருகிறார்.இதில், மூன்றாம் நாள் உத்சவமான நாளை, காலை கருடசேவையும், மாலை ஹனுமந்த வாகன உத்சவமும் நடக்கிறது.ஏழாம் நாள் உத்சவமான வரும் 19ல், காலை தேரோட்டமும், மாலை திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறுகிறது.