நிலம் அளவீடு தடுத்த 9 பேர் மீது வழக்கு
காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதி நிலம் அரசு நிலமாகும்.தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. பரந்துார் ஊராட்சி நாகப்பட்டு கிராமத்திற்கு, கடந்த மாதம் நிலம் அளவீடு செய்ய வருவாய் துறையினரை கிராம பெண்கள் முற்றுகையிட்டனர்.அதை தொடர்ந்து, நேற்றுமுன்தினம், தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்த நெல்வாய் துணை கிராமத்தில், வருவாய் துறையினர் நிலம் அளக்க சென்றனர்.அப்போது, நெல்வாய் கிராமத்தினர், வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், நெல்வாய் கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர்.இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று வழக்குகளின்கீழ், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் மீது நேற்று, பொன்னேரிக்கரை போலீசார், வழக்கு பதிவு செய்து உள்ளனர்.