மகளிர் குழு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் குறுகலான இடத்தில் குழந்தைகள் பரிதவிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவன் குடியிருப்பில், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் இயங்கும் புதுநகர் அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு பல்லவன் குடியிருப்பு, புதுநகர் அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மையத்திற்கு என, சொந்தமான அங்கன்வாடி மைய கட்டடம் இல்லை. இதனால், இரு ஆண்டுகளாக குறுகலாக உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் போதுமான இடவசதி, காற்றோட்ட வசதி இல்லாமல் பயிலும், குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி கல்வி கற்க இயலாமல் பரிதவித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் நெருக்கடியான அறையின் ஒரு பகுதியில், சமையல் அறையும் செயல்படுகிறது. இதனால், காஸ் ஸ்டவ் பற்றவைத்து சமையல் செய்யும்போது, ஒரே அறையில் உள்ள குழந்தைகள் சூடான பாத்திரங்களை தொட்டாலோ, எரிந்து கொண்டிருக்கும் காஸ் அடுப்பின் அருகில் சென்றாலோ விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைக்கு குழந்தைகள் தெருவில் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, பல்லவன் குடியிருப்பில் மகளிர் சுயஉதவிக்குழு இயங்கும் புதுநகர் அங்கன்வாடி மையத்திற்கு என, சொந்தமாக புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.