உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நவ., 30க்குள் பயிர் காப்பீடு விவசாயிகள் பதிவிற்கு கெடு

 நவ., 30க்குள் பயிர் காப்பீடு விவசாயிகள் பதிவிற்கு கெடு

காஞ்சிபுரம்: 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா பயிருக்கான காப்பீடு செய்யும் அவகாசம், 15 நாட்கள் நீட்டித்து, நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்யலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், சம்பா பயிருக்கான விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை உள்ளது. சம்பா பருவத்திற்கான, நெல் பயிர் காப்பீடு செய்யும் கடைசி நாளாக, நவம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து, நவம்பர் 30ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம். எனவே, சம்பா பயிரிடும் விவசாயிகள் அனைவரும், வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு 545 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்யலாம். பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ- - சேவை மையங்கள், வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ