வீடு கட்டுமான பணிக்காக பனப்பாக்கத்தில் மின் திருட்டு
ஸ்ரீபெரும்புதுார்: பனப்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிக்காக, சட்ட விரோதமாக மின் கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டு வருகிறது. குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள, மேயக்கால் புறம்போக்கு நிலத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், புதிதாக ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மூர்த்தி நகர் இரண்டாது தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிக்காக, அருகே உள்ள மின் கம்பியில் இருந்து, சட்ட விரோதமாக கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு வருவாய் மற்றும் மின் இழப்பு ஏற்படுகிறது. மேலும், மின் கம்பியில் கொக்கி போட்டு பாதுகாப்பு இல்லாமல் தொங்கும் மின் ஒயர்களால், மழை பெய்யும் போது மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.