| ADDED : நவ 19, 2025 04:43 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை மறுதினம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளன. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 044 -27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.