உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூங்காவில் உபகரணங்கள் பழுது சீரமைக்க ஏரிவாய் மக்கள் வலியுறுத்தல்

பூங்காவில் உபகரணங்கள் பழுது சீரமைக்க ஏரிவாய் மக்கள் வலியுறுத்தல்

முத்தியால்பேட்டை, ஏரிவாய் கிராமத்தில் உள்ள, 'அம்மா' பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், 2018ல், 30 லட்சம் ரூபாய் செலவில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற் பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இதில், சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்கான நடைபாதை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, இயற்கை உபாதைக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. முத்தியால்பேட்டை ஊராட்சி சுற்றியுள்ள பகுதியினர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்டவை பழுதுடைந்துள்ளன. அதேபோல, உடற் பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களும் பழுதடைந்துள்ளதால் அவை பயன்பாடின்றி வீணாகி வருகின்றன. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, 'அம்மா' விளையாட்டு பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏரிவாய் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை