கால்நடை மருத்துவமனை வளாகத்தில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் பட்டுப்போன மரத்தை அகற்ற, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின், கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்துதல், கோழி மற்றும் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனை வளாகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், பசுமை சூழலை ஏற்படுத்த பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து, அதன் ஆயுட்காலத்தையும் தாண்டிய நிலையில் உள்ளன. அதில், மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே உள்ள, அசோகா மரம் ஒன்று முற்றிலும் பட்டு போய் காய்ந்த நிலையில் உள்ளது. இந்த காய்ந்த மரம் எந்நேரத்திலும் விழும் என்பதால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கால்நடை மருத்துவமனை நிர்வாகம், காய்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.