அவளூர் ஏரிக்கு பாலாற்று நீர் வராததால் விவசாயிகள் கவலை பெரியநத்தத்தில் தடுப்பணை அமையுமா?
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த அவளூரில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 105 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீர் வாயிலாக 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும்.அவளூரில் அருகே, 1 கி.மீ., துரம் உள்ள பெரியநத்தம் பாலாற்றில் இருந்து, அவளூர் ஏரிக்கான வரத்து கால்வாய் உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இக்கால்வாய் வழியாக செல்லும் நீரால் ஏரி நிரம்புகிறது.கடந்த சில ஆண்டுகளாக பாலாற்று தண்ணீர், அவளூர் ஏரிக்கு வர இயலாத நிலை உள்ளதாகவும், இதனால் விவசாயம் பாதித்துள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.அவளூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:கடந்த ஆண்டுகளில் பாலாற்றில் மணல் அள்ளியதாலும், மணல் அரிப்பு போன்ற காரணங்களாலும் பெரியநத்தம் பாலாற்று படுகை பள்ளமாக உள்ளது. ஆனால், ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் மேடாக உள்ளது.இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், ஆற்று கால்வாய் மேடு காரணமாக, அவளூர் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், ஏரி முழுமையாக நிரம்பாததோடு, ஏரியின் உபரிநீர் வாயிலாக நிரம்ப வேண்டிய தம்மனுார், நெய்குப்பம் ஆகிய ஏரிகளும் நீர்வரத்து இல்லாமல் பாதித்து வருகிறது. எனவே, அவளூர் ஏரிக்கு முக்கிய நீர்வரத்து ஆதாரமாக உள்ள பெரிய நத்தம் பாலாற்றில் மணல் மேடு ஏற்படுத்துதல் அல்லது பாலாற்று கரையோரம் குறிப்பிட்ட துாரம் வரை தடுப்புச்சுவர் அமைத்து, தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.மேலும், பெரியநத்தம் பாலாற்றில் தடுப்பணை கட்டி, ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.