குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால் வருவாய் இழப்பு முன்கூட்டியே நிலையங்கள் மூடியதாக விவசாயிகள் புகார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு கொள்முதல் நிலையங்கள் முன் கூட்டியே முடிவிட்டனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை ஆகிய இரு பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், நவரை பருவத்திற்கு சாகுபடி செய்யும் நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர். இதில், சொர்ணவாரி பருவத்திற்கு மட்டும் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, 2022- - 23ல், 23,426 விவசாயிகளிடம் இருந்து, 1.26 லட்சம் டன் நெல்லும், 2023- - 24ல், 21,906 விவசாயிகளிடம் இருந்து, 1.43 லட்சம் டன் நெல்லும், 2024- - 25ல், 8,652 விவசாயிகளிடம் இருந்து, 1.41 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு சொர்ணவாரி பருவத்தில், 76 நெல் கொள்முதல் நிலையங்களில், 7,144 விவசாயிகளிடம் இருந்து, 52,434 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, சொர்ணவாரி சாகுபடிக்கு 30,477 ஏக்கர் நெல் பரப்பளவை காட்டிலும் கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா மாநில நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறமிருக்க, கடந்த ஆடி மாதத்தில் நடவு செய்த நெல், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. அதாவது, சம்பா பருவத்திற்கு சாகுபடி செய்த, 28,034 ஏக்கர் நெல் அறுவடைக்கு வந்துள்ளது. குறிப்பாக, பரந்துார், புள்ளலுார், பள்ளம்பாக்கம், புரிசை, கோவிந்தவாடி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்த நெல்லை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்த நெல்லை, கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை என, விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: பரந்துார் கிராமத்தில், 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. பள்ளமான பகுதிகளில், நெற்கதிர்கள் எடுத்து வருகிறது. ஒரு சிலர் அறுவடை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில், நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கினால், விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். தனியார் நெல் வியாபாரிகள், 80 கிலோ நெல் மூட்டையை, 1,450 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். அதுவே, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 2,000 ரூபாய் வரையில் கிடைக்கும். நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதால், தனியார் நெல் வியாபாரிக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே, வேளாண் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஆய்வு செய்துவிட்டு சம்பா பருவத்திற்கு முன் கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொர்ணவாரி பருவத்திற்கு, ஆகஸ்ட் மாத இறுதியில், 76 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கி, 52,434 டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இதையடுத்து, சம்பா பருவத்திற்கு டிசம்பர் மாதம் துவக்க உள்ளோம். விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் வந்தால், முன் கூட்டியே திறக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
பிளாஸ்டிக் கோணிகளால் நெல்லுக்கு பாதுகாப்பு
 அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்வதற்கு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் சணல் கோணிகள் பயன்படுத்துகின்றனர்.தனியார் நெல் வியாபாரிகள், தற்போது பிளாஸ்டிக் கோணிகளை நெல் கொள்முதல் செய்ய பயன்படுத்துகின்றனர். இதனால், மழை பெய்தாலும் நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியும்.கூலியை கழித்தால், ஒன்றும் மிஞ்சாது 
தனியார் நெல் வியாபாரி கூறியதாவது: நாங்கள் வழக்கம் போல், நெல் கொள்முதல் செய்து வருகிறோம். சொர்ணவாரி பருவத்தில், 80 கிலோ நெல் மூட்டை 1,350 ரூபாய்க்கு கொள்முதல் செய்தோம். தற்போது, 100 ரூபாய் கூடுதலாக உயர்த்தி, 1450 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறோம். அரசு நெல் கொள்முதல் நிலையங்களை போல், ஈரப்பதம் இன்றி இருக்க வேண்டும். நெல்லை சுத்தம் செய்யும் கூலியை கழித்தால், ஒன்றும் மிஞ்சாது. இவ்வாறு அவர் கூறினார்.