ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உத்திரமேரூர்:மலையாங்குளம் ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையது. மழை நேரங்களில் ஏரி முழுமையாக நிரம்பும்போது, 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளதால், நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்து உள்ளது. இதனால், மழை நேரங்களில் போதுமான அளவு நீர் சேகரமாக முடியாத நிலை உள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் துார்ந்து உள்ளதால், சேகரமாகும் தண்ணீரை கொண்டு ஒரு போகத்திற்கு மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.மேலும், ஏரியில் கடல்பாலை செடிகளும் வளர்ந்து உள்ளன. இதனால், மழை நேரங்களில் தண்ணீரை சேகரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மலையாங்குளம் ஏரியை துார்வாரி சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.