செய்யாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
உத்திரமேரூர்: செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் வழியே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுழைகிறது. தொடர்ந்து, சிலாம்பாக்கம், வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம் வழியே சென்று திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த கொள்ளளவு நீரானது 20,000 கன அடி ஆகும்., ஜவ்வாது மலை அடிவாரத்தில் சில தினங்களாக கன மழை பெய்து வருவதால், நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், செய்யாற்றில் 10,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் தண்ணீரானது பல்வேறு கழிவுகளுடன், நுரை குவியல்களாக வருகிறது. இது குறித்து நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செய்யாற்றில் தற்போது 10,000 கன அடி தண்ணீர் வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் 17,000 கன அடி தண்ணீராக உயரும். 'இதனால், செய்யாறு கரையை ஒட்டி உள்ள பெருநகர், அனுமந்தண்டலம், சிலாம்பாக்கம், வெங்கச்சேரி, காவந்தண்டலம், இளைய னார்வேலுார், நெய்யாடு பாக்கம் உள்ளிட்ட 20 கிராம மக்கள், ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம்' என்றார்.