ஊஞ்சல்சேவை உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார பழனி ஆண்டவர் கோவிலில், கடந்த 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. மூன்றாம் நாளான கடந்த 3ம் தேதி அமரேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம், காலை 8:00 மணியளவில், அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் விமரிசையாக நடந்தது.நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 11:00 மணிக்கு மூலவர் பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.