வாகனம் மோதி ஊர்க்காவல் படை காவலர் பலி
காஞ்சிபுரம்:ஆற்ப்பாக்கத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு சென்ற ஊர்க்காவல் படை காவலர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 40; மாகரல் காவல் நிலைய ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாகரல் பகுதியில் இரவு ரோந்து பணி முடித்து, மாகரல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டிற்கு செல்ல, காஞ்சிபுரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை, 'லிப்ட்' கேட்டு சென்றார். 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தை, விஜய், 25, என்பவர், ஓட்டி சென்றார். ஆறப்பாக்கம் வழியாக சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மாகரல் போலீசார், இருவரையும் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் உயிரிழந்தார். படுகாயமடைந்த விஜய், உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பிய வாகனம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.