| ADDED : நவ 19, 2025 04:47 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே, ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, ஒரகடம் அருகே, வல்லம் வடகால் சிப்காட் தொழிற் பூங்காவில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வல்லம் வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில், புதிதாக கட்டப்பட்டு வரும், தொழிற்சாலை கட்டுமான பணிக்காக, நேற்று முன்தினம், ராட்சத கிரேன் ஒன்று வந்தது. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை, வல்லம் சந்திப்பில் இருந்து, வல்லம் - வடகால் சிப்காட் சாலையில் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக கிரேன் 'பிரேக் டவுன்' ஆகி சாலை நடுவே நின்றது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை, வல்லம் வடகால் சிப்காட் சாலைகள் சந்திக்கும் வல்லம் சந்திப்பில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் சாலை, ஒரகடம் சாலை, சிப்காட் சாலை என, மூன்று சாலைகளிலும் அணிவகுத்து வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. காலை நேரத்தில், வேலை மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் கடும் அவதியடைந்தனர். ஒரகடம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 7:00 - 11:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.