வெள்ள பாதிப்பு பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம், உத்திரமேரூர் பி.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஒன்றியக்குழு துணை தலைவர் வசந்தி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சூரியா மற்றும் ஒன்றியத்திற்கு வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதியின் கீழ், பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.மேலும், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மன்ற பொருளாக முன்வைக்கப்பட்டது. தற்போது, வடகிழக்கு பருவ மழைக்காலம் நிலவுவதால், அனைத்து வார்டுகளிலும், வெள்ள பாதிப்புகள் குறித்து கண்காணித்து, உடனுக்குடன் நிவாரண பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.