ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 ஊராட்சி செயலர்களின் காலி பணியிடங்களுக்கு, கீழம்பியில் நேர்காணல் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில், 274 ஊராட்சிகளில், 55 ஊராட்சி செயலர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 6,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன சுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில், 234 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, காஞ்சி புரம் அடுத்த, கீழம்பி திருமலை பொறியியல் கல்லுாரியில், நேர்காணல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேர்காணலுக்கு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அந்தஸ்தில் ஒருவர், வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தஸ்தில் ஒருவர் என, ஆறு குழுக்களில், 12 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். நேர்காணல், காலை, மதியம் என, இருவேளையும் நடைபெற உள்ளது. இதில், பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஊராட்சி செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.