மின் ஒயரில் உரசும் மரக்கிளைகளை அகற்ற காஞ்சி மக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில், மின் ஒயரில் உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், காசி குட்டை அருகில், சாலையோரம் உள்ள காட்டுவாகை மரத்தின் கிளைகள், மின் ஒயர்களை உரசும் வகையில் உள்ளது. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின் ஒயரில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின் ஒயர் அறுந்து விழுந்தால், மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில், மின் ஒயரில் உரசும் மரக்கிளை களை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.